Editor’s Voice – A New Diwali Thought

4786
Vysdom_Diwali_Wishes

வைசிய சொந்தங்களுக்கு கண்ணணின் அன்பான வணக்கங்கள்!

உலக ஆர்ய வைசியர்கள் ஒன்றுபட்டு இணையும் தளமான இந்த VYSDOM.IN தளத்தில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மஞ்சள் குங்குமம்

இந்த வார்த்தையை சொல்லும்போதே நமக்குள்ளே ஒருவிதமான பாசிட்டிவ் எனர்ஜி உருவாவதை நம்மால் உணர முடியும் இந்த மஞ்சள் குங்குமத்தின் வார்த்தைக்கு பின்னே எத்தனையோ உணர முடியாத அல்லது நாம் உணர்ந்து கொள்ள முயற்சிக்காத விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன் எப்படி தெரியுமா?

நம் முன்னோர்கள் உறவுகளை வளர்ப்பதற்கு பலவிதமான செயல்களை சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற வார்த்தைகளுக்கு பின்னே மறைபொருளாக பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் ஒன்றை இந்தப் பதிவில் நாம் காண்போம்.

இன்றும் நம் வைசியகுல மக்களின் இடையே பெரும்பான்மையான மக்களிடத்தில் ஓர் வழக்கம் உள்ளது அது என்னவென்றால் தீபாவளி திருநாளுக்கு நம் உடன்பிறந்த சகோதரிகளுக்கு அதாவது திருமணமாகி கணவன் வீடு சென்றுவிட்ட சகோதரிகளுக்கு தீபாவளிக்கு மஞ்சள் குங்குமத்திற்கு என்று ஏதாவது பணம் அனுப்புவார்கள் அது திருமணமாகி சென்ற நம் சகோதரிகளுக்கு ஒரு மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

ஏனென்றால் தாய் வீட்டிலிருந்து திருமணமாகி பெற்ற தாய் தந்தை கூடப்பிறந்த சகோதர சகோதரிகள் பிறந்த ஊர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி புகுந்த வீடு செல்லும் நம் சகோதர சகோதரிகள் தலை தீபாவளி என்ற வைபவத்திற்கு பின் பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் வருகின்ற இந்த மஞ்சள் குங்குமம் தொகையை மனதிற்குள் மிகவும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு எதிர்நோக்கி இருப்பார்கள் தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல ஆனால் நம் தாய் வீட்டிலே நம்மை நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதை அவர்கள் மனதிற்குள்ளேயே எடை போட்டுப் பார்ப்பார்கள்.தாய் தந்தை காலத்திற்குப் பின்னே கூட சகோதரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் இதில் தவறு இருப்பதாக அர்த்தமில்லை தொகை சிறியதாக இருந்தால் வெளியிலே புலம்புவார்கள் ஆனால் மனதிற்குள்ளே அளவில்லா ஆனந்தத்தை அடைவார்கள்.

இதை ஏன் தெரியுமா நம் முன்னோர்கள் பழக்கி வைத்தார்கள் தாய் தந்தையான நம்முடைய காலத்திற்குப் பின்னே அண்ணன் தங்கை உறவு தொடர்ந்து நிலைக்க வேண்டும் ஒரு பெண்ணுக்கு மஞ்சள் குங்குமத்தை தாய் தந்தை பார்த்து உண்டாக்கி வைத்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டியது சகோதரர்களின் கடமையாகும்!

சகோதரிகளின் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்களின் தாய் வீட்டில் ஏதாவது ஒரு ரியாக்சன் இருக்கும் அது நல்ல விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் துவக்கி வைத்த விஷயம் இன்றைய காலச்சூழலில் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு இருந்தால்கூட இந்த முறை தீபாவளிக்கு மஞ்சள் குங்குமம் பெயரில் நம்மாலான தொகையை சகோதரிகளுக்கு அனுப்பி வைப்போம் உறவுகளை மலரச் செய்வோம் சகோதரி இல்லாதவர்கள் சகோதரியின் மகளுக்கு செய்யலாம் மருமகளுக்கு செய்யலாம் விட்டுப் போன உறவுகளை தொட்டுப்பார்த்து இணைக்கும் ஒரு நாடி பிடித்துப் பார்க்கும் செயலே இது. கோபத்தில் சகோதரிகள் மறுத்தாலும் நாம் பதில் கோபம் காட்டாது பொறுமை காத்து அனுப்பிடுவோம் அதேபோல என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் தாய் வீட்டிலிருந்து வருகின்ற இந்த மஞ்சள் குங்கும தொகையை சகோதரிகள் ஆகிய நாமும் மறுக்காமல் பெற்றுக்கொள்வோம்.

ஏனென்றால் யாரும் இன்னாரோடு தான் பிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விருப்பப்பட்டு நேயர் விருப்பமாக பிறப்பதில்லை இவையாவும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விஷயங்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தால் போதும் எத்தனையோ மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் அத்தனையையும் நாம் அனுப்புகின்ற இந்த மஞ்சள் குங்கும தொகை நம் உடன் பிறந்தவர்களுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்ட வசதி நிலையிலிருந்தாலும் வெளியிலே வெறுப்பது போல் அவர்கள் காட்டிக்கொண்டாலும் அவர்களின் உண்மையான மனது இந்த தொகையை உள்ளூர ரசிக்கும் விரும்பும் இந்த விஷயங்கள் பலவற்றை நாம் ஒவ்வொருவருமே நம் குடும்பங்களில் அல்லது உறவு குடும்பங்களில் நடப்பதை உணர்ந்து இருப்போம் நாம் வலியச் சென்று மஞ்சள் குங்குமம் அனுப்புவதால் நம் சகோதரிகளிடம் நாம் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை அவர்கள் அதை வாங்க மறுப்பதால் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தமும் இல்லை இதுபோன்ற உணர்வுபூர்வமான விசயங்களில் நாம் வெளியுலகத்திற்காக போலி கவுரவம் பார்க்காமல் உண்மையாய் உடன் பிறந்தோரின் அடிமனதில் இருக்கும் பாசத்தை உணர்வோம் உறவுகளை பலப்படுத்தவும் விட்டுப்போன உறவுகளை தொட்டுப் பார்த்து இணைத்துக் கொள்ளவும் உதவுகின்ற இந்த செயலை நாம் அனைவரும் நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதோடு அல்லாமல் உதாரணமாக வாழ்ந்து காட்டுவோம் அதுதான் நம் பிள்ளைகளுக்கு இடையே சகோதரத்துவத்தை மலரச் செய்யும் என்று சிந்திப்போம் அதன்படி செயல்படுவோம்.

ஜெய் வாசவி!

10 COMMENTS

  1. உண்மை நல்லவிதமாக பழக்க வழக்கங்கள் சிறு வயதிலேயே பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்க வேண்டும் நன்றி

Comments are closed.